"சிவபெருமான் அழைக்கிறார்..." - உருக்கமான கடிதம் எழுதிவிட்டு +2 மாணவி மாயம்!
தெலுங்கானா மாநிலம் மேட்ச்சல் மாவட்டம், மேடுபள்ளி பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி மது ஹசிதா, தனது வீட்டில் இருந்து மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.
பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த மது ஹசிதா, நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென மாயமானார். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய அவரது தாய் சைலஜா, மகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீடுகளில் தேடியும் மகள் கிடைக்கவில்லை.
வீட்டைச் சோதனையிட்டபோது, மது ஹசிதா எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், "நான் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன். சிவபெருமான் என்னை அழைக்கிறார், அதனால் நான் அவரிடம் சென்று கொண்டிருக்கிறேன்" என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய், உடனடியாக மேடுபள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. மாணவி முன்பு வசித்த லாலா பேட்டை பகுதியில் ஒரு வாலிபருடன் பழகி வந்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் அவரைக் கண்டித்ததால், கடந்த 10 மாதங்களாக அந்தத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. காதல் முறிவால் கடும் விரக்தியில் இருந்த மது ஹசிதா, கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் தனிமையிலேயே இருந்துள்ளார். எப்போதும் தியானத்தில் இருப்பது போலவே காட்சியளித்ததாகத் தெரிகிறது.
ஆன்மிக காரணங்களைக் கூறி மாணவி மாயமாகியுள்ளாரா அல்லது பழைய நண்பருடன் சென்றுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் செல்பேசி எண்கள் மற்றும் அவர் பழகிய நபர்களின் விபரங்களைச் சேகரித்துள்ள போலீசார், அவரைத் தேட தனிப்படை அமைத்துள்ளனர். சிவபெருமான் அழைப்பதாகக் கூறிச் சென்ற மாணவி ஏதேனும் ஆசிரமங்களுக்குச் சென்றுள்ளாரா அல்லது வேறு ஏதேனும் விபரீத முடிவை எடுத்துள்ளாரா எனத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.