“மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: பொதுமக்களுக்கு தரிசன நேரம் என்ன? 7 வகை பாஸ் விவரம்” முழு தகவல்கள்!
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் மகா கும்பாபிஷேகம் வரும் செப்.17-ம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண வரும் பக்தர்களுக்காக 7 வண்ணங்களில் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
7 வண்ண அனுமதி அட்டை யாருக்கு?
கும்பாபிஷேக நாளில் செல்லுபடியாகும் அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே காலை 5 மணி முதல் 7 மணி வரை கோவில் மேல்தளத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். பச்சை, மஞ்சள், சிவப்பு, பழுப்பு, நீலம், ரோஸ் மற்றும் ஊதா என 7 வண்ணங்களில் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வண்ண அட்டைக்கும் தனித்தனி நுழைவு வழிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எப்போது தரிசிக்கலாம்?
கும்பாபிஷேகம் முடிந்து, காலை 10 மணிக்கு பிறகு பொதுமக்கள் தொடர்ந்து தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் தெற்கு கோபுரம் மற்றும் மேற்கு கோபுரம் வழியாக மட்டுமே கோவிலுக்குள் செல்ல வேண்டும். தரிசனம் முடிந்ததும் கிழக்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.
கும்பாபிஷேக நேரத்தில் அனுமதி அட்டை இல்லாத பொதுமக்கள் சித்திரை வீதிகளில் நிற்க அனுமதி இல்லை. பழைய கட்டிடங்களின் மேற்கூரைகளில் நின்று நிகழ்வை பார்ப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகம் எத்தனை மணிக்கு?
செப்.17 காலை 7.40 முதல் 8.10 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து 8.30 மணி முதல் 10 மணி வரை மூலஸ்தான அம்மன் மற்றும் சுவாமி சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இரவு 7 மணிக்கு நான்கு மாசி வீதிகளில் சுவாமி, அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.