ஆபத்தான முறையில் 'ரீல்ஸ்' வீடியோ - ஓடும் வாகனங்களின் கதவுகளைத் திறந்த வாலிபர் கைது!
சமூக வலைதளங்களில் 'லைக்குகளை' பெறுவதற்காகச் சாலையில் ஆபத்தான முறையில் சாகசங்களில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்காக இளைஞர்கள் பலர் தங்களின் உயிரையும், மற்றவர்களின் பாதுகாப்பையும் பொருட்படுத்தாமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில், டெல்லியில் வாலிபர் ஒருவர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ எடுத்து அதனைப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், வாலிபர் ஒருவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தைச் ஓட்டிக்கொண்டே, சாலையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் கதவை வலுக்கட்டாயமாகத் திறப்பது, பேருந்திற்கு முன்பாகத் திடீரென வாகனத்தை நிறுத்துவது மற்றும் பிற வாகனங்களின் கதவுகளைத் திறப்பது போன்ற அதிரச்சியூட்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
தன்னை யாரும் அடையாளம் கண்டுவிடக் கூடாது என்பதற்காக, அந்த வாலிபர் தனது இருசக்கர வாகனத்தில் எண் பலகை (Number Plate) இல்லாமலேயே உலா வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள பல்வேறு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட வாலிபரின் அடையாளத்தைக் கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து, வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியைச் சேர்ந்த துஷார் புனியா என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான வாலிபர் இதற்கு முன்னரும் இது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"சமூக வலைதளப் புகழுக்காகச் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளனர்.