'ஜனநாயகன்' ரிலீஸ் கொண்டாட்டத்தில் விபரீதம் - கழுத்தில் சரவெடி சுற்றிக் கொளுத்திய இளைஞர் கைது!

 

திரையரங்கு ஒன்றில் 'ஜனநாயகன்' திரைப்படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர், தனது கழுத்தில் சரவெடிச் சரத்தைக் கட்டிக்கொண்டு அபாயகரமான முறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படத்தின் திரையிடலைக் கொண்டாடுவதாகக் கூறிக்கொண்ட அந்த இளைஞர், தனது கழுத்திலேயே சரவெடியைச் சுற்றிவைத்து அதை வெடிக்கச் செய்துள்ளார். சுற்றியிருந்த பொதுமக்களுக்கும் திரையரங்கிற்கு வந்த மற்ற ரசிகர்களுக்கும் பெரும் அச்சத்தையும் உயிராபத்தையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்த இந்தச் சம்பவத்தின் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் வைரலானது.

பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அந்த இளைஞர் மீது காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இளைஞர் கைது: பொது இடத்தில் பிறருக்கு ஆபத்து விளைவித்தல், விதிகளை மீறி ஆபத்தான முறையில் பட்டாசு வெடித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட இளைஞரைக் கைது செய்தனர்.

திரையரங்கிற்குள் மற்றும் திரையரங்க வளாகத்தில் ரசிகர்கள் இதுபோன்று பொதுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் தரும் வகையில் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ள காவல்துறையினர், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.