பட்டாசு வெடி விபத்தில் மத போதகர்கள் உட்பட 10 பேர் பலி... பகீர் வீடியோ!
வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டின் டிமஸ்கல்சின்கோ நகரில் உள்ள கிராமத்தில் கிறிஸ்தவ மத வழிபாட்டுத் தலம் ஒன்று உள்ளது. இத்தலத்தில் கடந்த சனிக்கிழமை திருவிழா நடைபெற்ற நிலையில், அதன் இறுதியில் வாணவேடிக்கைக்காக மத வழிபாட்டுத் தலத்திற்கு அருகே பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.
அப்போது அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் திடீரென வெடித்துச் சிதறின. இந்த பயங்கர வெடிவிபத்தில் திருவிழாவிற்கு வந்திருந்த மத போதகர்கள் மற்றும் கிராம மக்கள் உள்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 60 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.