பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு.. இருவரும் பேசியது என்னென்ன?

 

தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக டெல்லி சென்றார். நேற்று பல்வேறு அதிகாரிகளை சந்தித்தார். இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது திருவள்ளுவர் சிலையை பிரதமர் மோடிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கினார். 

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், கடந்த முறை சென்னை வந்த பிரதமர், அடுத்த முறை டெல்லி வரும்போது தன்னை பார்த்துவிட்டுச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படி பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டோம், உடனே கொடுக்கப்பட்டது. பிரதமரைச் சந்தித்தேன்.
இந்தச் சந்திப்பின்போது அரசியல் எதுவும் பேசவில்லை. தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதேபோல் பிரதமரின் தாயார் மறைவுக்கு எனது இரங்கலைத் தெரிவித்தேன்.

தமிழகத்தில் விளையாட்டு தொடர்பான விஷயங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். முதல்வர் கோப்பை குறித்த விவரங்களை எடுத்துக் கூறினேன். அடுத்தமுறை கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதேபோல், இந்திய விளையாட்டு ஆணையம் தமிழகத்திற்கு வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தேன்.

அதேபோல், நீட் விலக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். அப்போது அது தொடர்பாக அவர் சில விளக்கங்களை அளித்தார். தமிழ்நாட்டு மக்களின் மனநிலை இதுதான், அதை உங்களிடம் தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமை என்று கூறினேன். அதேபோல், திமுகவின் சட்டப் போராட்டம் தொடரும் என்று கூறினேன். பிரதமர் உடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது, என்று அவர் கூறினார்.