முன்னாள் திமுக எம்.பி., இரா.மோகன் மரணம்... முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!
முன்னாள் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் இரா.மோகன் இன்று காலை உடல்நலக் குறைவு காரணமாக காலமான நிலையில் அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் திரு. இரா.மோகன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அவரது மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்தவர். எமர்ஜென்சிக் காலத்தில் சிறைவாசம் அனுபவித்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களது பேரன்பிற்குப் பாத்திரமான அவர். 1980ம் ஆண்டு கோவை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகவும், 1989ம் ஆண்டில் சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராகவும் பணியாற்றி, தன்னுடைய தொண்டால் பொதுமக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றார்.
கொள்கை மறவராக வாழ்ந்த திரு. இரா.மோகன் அவர்களுக்கு, கடந்த 15.9.2022 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழாவில், "அண்ணா விருது" வழங்கி, அவரது பொதுவாழ்வைப் போற்றினேன்.
நான் எப்போது கோவைக்குச் சென்றாலும், திரு.இரா.மோகன் அவர்களைச் சந்திக்கத் தவறியதில்லை. இன்று அவர் மறைந்த வேதனை மிகுந்த செய்தியால் கலங்கி நிற்கிறேன். திரு. இரா.மோகன் அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கழகத் தோழர்கள், கோவை மக்கள் என அனவருக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.