ஐரோப்பாவின் எட்னா எரிமலை மீண்டும் வெடிப்பு...விமான சேவைகள் கடும் பாதிப்பு!
இத்தாலி நாட்டின் சிசிலி தீவில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா எரிமலை ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையாகும். இந்த எரிமலை அடிக்கடி வெடித்துச் சிதறி வருகிறது கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எரிமலை வெடித்தபோது அதன் சாம்பல் பல கிலோமீட்டர்களுக்கு பரவியது. இந்த நிலையில் எட்னா எரிமலை மீண்டும் வெடித்துள்ளது.
எரிமலை மீண்டும் வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்புகளை கக்கி வருகிறது. மலையில் இருந்து செக்கச்சிவந்த நிறத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் பாறைகளும் மற்றும் கற்களும் உருண்டு விழுகின்றன. அதோடு எரிமலையில் இருந்து வெளியாகும் சாம்பல் மற்றும் புகை காரணமாக சிசிலி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எரிமலை வெடிப்பு காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விமான சேவைகள் எப்போது முழுமையாக வழக்க நிலைக்கு திரும்பும் என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்