ஒரு லட்சம் சதுரடி... 3 டைட்டல் பார்க்குகள்... 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு!  ஹிட்டாகும் மூன்று மாவட்டங்கள்... பட்ஜெட்டில் செம அறிவிப்பு!

 

சுமார் ஒரு லட்சம் சதுரடியில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் மூன்று டைட்டல் பூங்காக்கள் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city) அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.  ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த மூன்று டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய பழனிவேல் தியாகராஜன், உலகளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டை ஒரு முக்கிய மையமாக நிலைநாட்டுவதற்கும். பெருகி வரும் அலுவலகக் கட்டமைப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கும், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஓசூரில், தமிழ்நாடு தொழில்நுட்ப நகரங்களை (TNTech city) இந்த அரசு அமைக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், தகவல் தொழில்நுட்பம், உலகளாவிய திறன் மையங்கள் (Global Capability Centres), நிதிநுட்பம் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட திறன்மிகு மையங்கள், புத்தொழில் காப்பகங்கள், வர்த்தக மையங்கள் பொழுதுபோக்கு வசதிகள் போன்ற அனைத்துக் கட்டமைப்புகளும் இந்தத் தொழில்நுட்ப நகரங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சென்னையில் முதன்முறையாக 2000-ம் ஆண்டில், டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில், ஏழு மாவட்டங்களில் நியோ டைடல் பூங்காக்கள் (Neo Tidel Parks) அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இதன் நீட்சியாக, ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலர ஒரு இலட்சம் சதுரடி கட்டடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம், சுமார் 4,000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.