கனமழையால் மதில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் பலி; 2 பெண்கள் படுகாயம்!
கடந்த சில நாட்களாகவே புதுச்சேரியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால், புதுவையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை ஒன்றின் மதில் சுவர் சரிந்து விழுந்த விபத்தில் 80 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த விபத்தின் போது அருகில் இருந்த தள்ளுவண்டி உணவகம் முழுமையாக இடிந்து தரைமட்டமாது. இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர், பொதுப்பணித்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து சென்று விடிய விடிய தீவிரமான மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஜேசிபி எந்திரங்களும் ஆம்புலன்ஸ்களும் பயன்படுத்தப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்திற்கு முதலமைச்சர் என். ரங்கசாமி நேரில் சென்று பார்வையிட்டு மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் இருக்கத் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆபத்தான நிலையில் உள்ள சுவர்கள் மற்றும் பழைய கட்டிடங்களை அடையாளம் கண்டு உடனடியாக அகற்ற வேண்டிய நடவடிக்கைகளில் துறை சார்ந்த அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.