நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஒன்றரை மாத குழந்தை மீட்பு!
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கித் தவித்த 45 நாட்களேயான பச்சிளம் குழந்தையை நேபாளப் பாதுகாப்புப் படையினர் எவ்விதக் காயமுமின்றிப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
நேபாளத்தின் போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் ரசுவா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் உயரமான பகுதிகளிலும் மாடிகளிலும் தஞ்சமடைந்தனர்.
பாக்மதி மாகாணத்திற்கு உட்பட்ட ரசுவா மாவட்டத்தில் நேபாள ராணுவம் மற்றும் ஆயுதக் காவல் படையினர் தீவிர மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளத்தில் சிக்கித் தவித்த ஒன்றரை மாதக் குழந்தையை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட குழந்தை உடனடி மருத்துவப் பரிசோதனைக்காகத் தற்காலிக அவசரக்கால மீட்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அதன் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. வெள்ளப் பேரிடரிடையே பச்சிளம் குழந்தையைக் காக்க ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இந்த மீட்புப் பணி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.