அச்சச்சோ... இளம்வயதிலேயே முன்னாள் உலக அழகி போட்டியாளர் திடீர் மரணம்!
முன்னாள் உலக அழகி போட்டியாளர் ஷெரிகா டி அர்மாஸ் கடந்த 13-ம் தேதி கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென் அமெரிக்க நாடான உருகுவே நாட்டை சேர்ந்தவர் ஷெரிகா டி அர்மாஸ் (26). இவர் 2015-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால், அவரால் முதல் 30 இடங்களுக்குள் வரமுடியவில்லை. இருப்பினும், அந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் கலந்துகொண்ட 18 வயதான ஆறு அழகிகளில் ஒருவராக இருந்தார்.
இந்த நிலையில், இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக கீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளை பெற்று வந்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் மரணம் அடைந்துள்ளார். அவருடைய மரணம் உருகுவே மற்றும் உலக நாடுகள் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அவருடைய சகோதரர் மெய்க் டி அர்மாஸ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சிறிய சகோதரியே உயரே செல்லவும். எப்போதும் என்றென்றும் என பதிவிட்டு உள்ளார். அவருடைய மறைவுக்கு உருகுவேவின் மிஸ் யூனிவர்ஸ் அழகியான கர்லா ரொமிரோ, என்னுடைய வாழ்வில் நான் சந்தித்தவர்களில் மிக அழகிய பெண்களில் ஒருவர் என தெரிவித்து உள்ளார்.
இதேபோன்று 2021-ம் ஆண்டுக்கான மிஸ் உருகுவே அழகியான லோலா டி லாஸ் சான்டோஸ், எனக்கு அளித்த அனைத்து ஆதரவுக்காகவும், அன்பு, மகிழ்ச்சி என இன்றளவும் அவை என்னுடன் மீதமுள்ளன. அதற்காக எப்போதும் உங்களை நான் நினைவுகூர்வேன் என பதிவிட்டு உள்ளார்.