பிலிப்பைன்ஸ் பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச்சூடு! 2 மாணவர்கள் பலி - 10 பேர் காயம்!
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பள்ளி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 மாணவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு கோட்டாபட்டோ மாகாணத்தின் பங்கா நகரில் உள்ள பங்கா தேசிய உயர்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. பள்ளி வளாகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த இளம் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 14 வயதுடைய ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய இளம் மாணவரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளி வளாகத்தை பாதுகாப்புப் பகுதியாக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 10 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பிற்பகல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவர் ஆன்லைன் “True Crime” தொடர்பான சமூகத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் தகவலையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் இந்த தொடர்புதான் தாக்குதலுக்கான காரணம் என இதுவரை உறுதி செய்யப்படவில்லை.சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் உறுதி செய்யப்படாத தகவல்களை பரப்ப வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.