ஹூக்ளி நதியில் பிரதமர் மோடியின் படகுப் பயணம்! படகோட்டிகளை அரவணைத்து நெகிழ்ச்சி!
தமிழகத்தில் முதற்கட்டத் தேர்தல் முடிந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் அடுத்தகட்டத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இன்று காலை கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஹூக்ளி நதிக்கரையில் பிரதமர் மோடி சிறிது நேரத்தைச் செலவிட்டார்.
ஹூக்ளி நதியில் சிறிய மரப்படகில் பயணம் செய்த பிரதமர், அங்கிருந்த படகோட்டிகளிடம் அன்புடன் பேசினார். "படகோட்டிகளின் கடின உழைப்பு உண்மையிலேயே போற்றத்தக்கது. அவர்களுடன் உரையாடியது ஒரு சிறந்த அனுபவம்" என்று அவர் தெரிவித்தார். ஒரு படகோட்டியை அன்புடன் கட்டியணைத்த பிரதமர், அவருக்கு ₹1000 வழங்கி தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
“அன்னை கங்கைக்கு நன்றி செலுத்த இன்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு வங்காள மாநில மக்கள் மனதிலும் கங்கை ஒரு மிகச் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது. அன்னை கங்கையின் தெய்வீக நீர் ஒரு முழு நாகரிகத்தின் ஆன்மாவைத் தாங்கிச் செல்கிறது,” எனப் பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட பொதுமக்களுடனும் அவர் கலந்துரையாடினார்.