பொதுமக்கள் கொந்தளிப்பு... திரையரங்குகளில் பாப்கார்ன் ரூ. 600, ரூ. 90-க்கு குடிநீர் விற்பனை !
கேரளாவில் உள்ள சில Multiplex திரையரங்குகளில் உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு அதிகமாக விற்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, ஒரு பாப்கார்ன் விலை ரூ. 600 வரையிலும், 1 லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ. 90 வரையிலும் விற்கப்படுவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெளிமாநிலமான கேரளாவில் திரையரங்குகளில் அனுமதிக்க முடியாத அளவிற்கு விலை உயர்த்தப்பட்டு விற்கப்படுவதால், குடும்பத்துடன் சினிமாவுக்குச் செல்லும் நடுத்தர மக்கள் கடுமையான பொருளாதாரச் சுமையைச் சந்திப்பதாகக் கவலை தெரிவித்துள்ளனர்.
-
இதன் எதிரொலியாக, மாநில உணவு மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறையின் உத்தரவின் பேரில், சட்ட அளவீட்டுத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினர் இணைந்து வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகளில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.
-
திறந்த சந்தை விலையை விட ஐந்து மடங்கு அதிகமாக உணவுப் பொருட்கள் விற்கப்படுவது சோதனையில் கண்டறியப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகங்களுக்கு அதிகாரிகள் முறையான எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். மேலும், விதிகளை மீறி குடிநீர் வழங்காத மற்றும் விலைப் பட்டியல் வைக்காத இடங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.