அமெரிக்காவில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தா... முதல்வர் விஜய் பெருமிதம்!

 

 

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் 2026-ல் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்த வரலாற்றுச் சாதனை புரிந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ள தமிழக இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்குத் தமிழக முதல்வர் விஜய் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அபார மதிநுட்பத்துடன் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது அவரது விடாமுயற்சிக்குக் கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த மகத்தான வெற்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளது என முதல்வர் தனது பாராட்டுகளைப் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச அளவில் தமிழகத்தின் பெயரையும் நாட்டின் கீர்த்தியையும் உயர்த்திப் பிடித்திருக்கும் இளம் வீரர் பிரக்ஞானந்தாவுக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தொடர்ந்து பல சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று விளையாட்டு ஆர்வலர்களும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.