முதியோர் இல்லத்தில் தவிக்கும் மூத்த நடிகர்... நிதியுதவி செய்த ரஜினிகாந்த்!

 

புனே இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி பெற்ற முதல் தென்னிந்தியர் என்ற பெருமைக்குரியவர் நடிகர் மோகன் சர்மா. பல்வேறு திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற இவர், தற்போது தனது 80வது வயதில் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்வி மற்றும் போயஸ் கார்டன் வீட்டை விற்றதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாகத் தனது செல்வத்தை இழந்தார். இதனால் தங்குவதற்கு இடமின்றிச் சென்னை கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தஞ்சமடையும் நிலை இவருக்கு ஏற்பட்டது.

ஜெயின் சமூகத்தினர் நடத்தி வரும் இந்த முதியோர் இல்லத்தில் இவருக்கு உணவும் தங்குமிடமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாகத் தினமும் உட்கொள்ள வேண்டிய மருந்து மாத்திரைகளை வாங்க இவரிடம் பண வசதி இல்லை. திரைப்படத் துறையில் முக்கியப் பொறுப்புகளை வகித்து புகழுடன் வாழ்ந்த ஒரு கலைஞர், வாழ்க்கையின் இறுதி காலத்தில் இத்தகைய கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருவது திரைத்துறையினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மோகன் சர்மா முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்தின் கவனத்திற்குச் சில நாட்களுக்கு முன்பு கொண்டு செல்லப்பட்டது. நிலமையை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், உடனடியாகத் தனது சொந்த நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய் வழங்கி உதவி செய்தார். இந்த நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட நடிகர் மோகன் சர்மா, தனது மருத்துவச் செலவுகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும் எனக் கூறி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். மூத்த நடிகரின் இந்தத் துயர நிலையும் அவருக்கு ரஜினிகாந்த் செய்த உதவியும் திரையுலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.