"வீட்டு வேலை செய்ய மறுப்பது கொடுமை அல்ல" - விவாகரத்து வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
மனைவி வீட்டு வேலைகளைச் செய்ய மறுப்பதையோ அல்லது கணவரின் குடும்பத்தாருடன் ஒத்துப்போகாமல் இருப்பதையோ "மன ரீதியான கொடுமை" எனக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.
இந்த வழக்கு ஒரு கணவர் தனது மனைவிக்கு எதிராகத் தொடர்ந்த விவாகரத்து மேல்முறையீட்டு மனுவை அடிப்படையாகக் கொண்டது. அந்த மனுவில், மனைவி வீட்டு வேலைகளைச் சரியாகச் செய்வதில்லை. கணவரின் வயதான பெற்றோரை கவனிப்பதில்லை. அடிக்கடி வாக்குவாதங்களில் ஈடுபட்டு மன உளைச்சலைத் தருகிறார். இவை அனைத்தும் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் "கொடுமை" என்பதால் தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக் கணவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பில், மனைவி ஒரு வேலையாள் அல்ல. ஒரு பெண் திருமணத்திற்குப் பின் கணவர் வீட்டிற்கு வருவது அன்பிற்காகவும் உறவிற்காகவும் தான். அவர் அந்த வீட்டின் "ஊதியமில்லா வேலையாள்" கிடையாது. வீட்டு வேலைகளில் ஆர்வம் காட்டாமல் இருப்பது அல்லது சமையல் செய்ய மறுப்பது என்பது குடும்பத்திற்குள் நடக்கும் சாதாரண கருத்து வேறுபாடே தவிர, அதை ஒருவரைத் தண்டிக்கும் அளவிற்கான "கொடுமை" என்று சட்டப்படி வரையறுக்க முடியாது.
ஒரு பெண் தனது உடல்நிலை அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக வேலை செய்ய இயலாத சூழல் இருக்கலாம். இதைப் பெரிதுபடுத்தி விவாகரத்து கோருவது சட்டப்படி செல்லாது என்று தெரிவித்திருந்தனர். இந்தத் தீர்ப்பு இந்தியாவில் நிலவி வரும் ஆணாதிக்கச் சிந்தனை மற்றும் திருமணமான பெண்கள் மீதான வீட்டு வேலைப் சுமைகளைச் சட்ட ரீதியாக மாற்றியமைக்கும் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
"திருமணம் என்பது இரு சமமான நபர்களுக்கு இடையிலான ஒப்பந்தம். அங்கு ஒருவர் மற்றவருக்கு வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் சட்டப்படியாக இல்லை என்று நீதிபதிகள் தீர்ப்பில் உறுதிப்படுத்தினர்.