அமெரிக்கா செல்ல அனுமதி மறுப்பு... தெலங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!
தெலங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையிலான குழு இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா செல்வதற்கு மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. இதில் இங்கிலாந்து நாட்டிற்குச் செல்ல மட்டுமே மத்திய அரசு அனுமதி வழங்கியது. திட்டமிட்டபடி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றடைந்த நிலையில், அங்கிருந்து அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்குச் செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.
அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளதாக தெலங்கானா முதல்-மந்திரி அலுவலகம் குற்றம் சாட்டியுள்ளது. அரசியல் காரணங்களுக்காக இந்த அனுமதி மறுக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் மீது அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு வருகிற 30-ந் தேதி ஐதராபாத் திரும்பத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்த திடீர் மாற்றத்தினால் வருகிற 23-ந் தேதியே அவர் லண்டனில் இருந்து ஐதராபாத் திரும்புகிறார்.
மாநில அரசின் அலுவல்முறை பயணத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காதது பல்வேறு அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் குழுவினரின் அமெரிக்கப் பயணம் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது குறித்து தெலங்கானா அரசு தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது தேசிய அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.