2030-க்குள் 50 ஏவுகணைகளை அனுப்ப ஸ்கைரூட் நிறுவனம் திட்டம்!

 

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இந்தியாவின் முதல் தனியார் ஏவுகணையான விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் இந்த விண்கலத்தை உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் பிரத்யேகமாகத் தயாரித்துள்ளது. இன்று மதியம் 11.30 மணிக்கு ஏவப்படுவதாக முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்த இந்த விண்கலம், சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் சற்றுத் தாமதமாக மதியம் 12.05 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ஏவுவதற்கு 5 நிமிடங்கள் முன்பாக விண்கலத்தில் இருந்த சிறிய கோளாறை விஞ்ஞானிகள் கண்டறிந்து, அதனைத் தீவிர முயற்சியால் உடனே சரிசெய்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் வெற்றி குறித்து ஸ்கைரூட் நிறுவனத்தின் நிறுவனர் பரத் பெருமிதத்துடன் தற்பொழுது பேசியுள்ளார். முதல் முயற்சியிலேயே புவி சுற்றுப்பாதையை எட்டி வெற்றி பெறுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும், இந்தியாவின் முதல் தனியார் துறை விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என்றும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஏவுகணையானது 100 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் இந்திய விஞ்ஞானிகளால் மட்டுமே வடிவமைக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பாகும். தங்களின் நிறுவனம் மூலமாக வரும் 2030-க்குள் 50 ஏவுகணைகளை விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதன் மூலம் இந்தியாவில் மேலும் பல எலான் மஸ்குகள் உருவாக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தனியார் விண்கலப் பரிசோதனை வெற்றியின் மூலம் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய வல்லரசு நாடுகளுக்கு அடுத்தபடியாக விண்வெளித் துறையில் இந்தியா ஒரு மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது.