தென்காசியில் ரூ.1,020 கோடி நலத்திட்டங்கள்... இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.1,020 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
முதல்-அமைச்சர் இன்று காலை நெல்லை மாவட்டம் அரியநாயகிபுரத்திலிருந்து காரில் புறப்பட்டு தென்காசி மாவட்டத்துக்கு பயணம் மேற்கொள்கிறார். மாவட்ட எல்லையான ஆலங்குளத்தில் தி.மு.க. மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆவுடையப்பன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அத்துடன் அத்தியூத்து, சுரண்டை, சாம்பவர்வடகரை வழியாக இலத்தூருக்கு அவர் செல்கிறார்.
இலத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சமாவது வீட்டை சுமதி என்ற பயனாளிக்கு வழங்கி திறந்து வைக்கிறார். பின்னர் அனந்தபுரம் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 24 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.445 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
மேலும் ரூ.575 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டுகிறார். இதன்மூலம் தென்காசி மாவட்டத்தில் மொத்தம் ரூ.1,020 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ஆய்க்குடி அமர் சேவா சங்கத்துக்கு சென்று அங்குள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடி, பின்னர் குற்றாலம் சுற்றுலா மாளிகையில் மதிய உணவு உட்கொண்டு மதுரை நோக்கி புறப்படுகிறார்.
முதல்-அமைச்சரை வரவேற்கும் வகையில் தென்காசி நகரம் முழுவதும் தி.மு.க.வினர் கட்சிக்கொடிகள், தோரணங்கள் அமைத்துள்ளனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!