"திருமணம் செய்வதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி!" - பல வாலிபர்களை ஏமாற்றிய இளம்பெண் கைது!

 

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், வாலிபர் ஒருவரைத் திருமணம் செய்துகொள்வதாகவும், தனது தொழிலில் பங்குதாரராகச் சேர்ப்பதாகவும் கூறி ரூ.50 லட்சம் வரை ஆன்லைன் மூலம் ஏமாற்றி மோசடி செய்த 29 வயது இளம்பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் அவர் இதேபோலப் பல வாலிபர்களை ஏமாற்றி ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்தது அம்பலமாகியுள்ளது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா அருகே உள்ள எடத்தலா பகுதியைச் சேர்ந்தவர் ஷம்லா ( 29). இவருக்குப் பெரும்பாவூர் அருகே உள்ள மஞ்சப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் கைபேசி மூலம் நெருக்கமாகப் பேசி வந்த நிலையில், அந்த வாலிபரைத் தான் திருமணம் செய்துகொள்வதாக ஷம்லா ஆசைவார்த்தை கூறியுள்ளார். மேலும், தனது வர்த்தகத் தொழிலில் முதலீடு செய்து பங்குதாரராக இணையுமாறும் வற்புறுத்தியுள்ளார்.

இதனை நம்பிய அந்த வாலிபர், கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 3 முதல் நவம்பர் 20 வரையிலான காலகட்டத்தில் பல்வேறு தவணைகளாகத் தனது வங்கி கணக்கு மற்றும் கூகுள் பே டிஜிட்டல் பரிமாற்றம் மூலம் மொத்தம் 50 லட்சம் ரூபாயை ஷம்லாவிற்கு அனுப்பியுள்ளார்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, அந்த வாலிபரைத் திருமணம் செய்யாமலும், தொழிலில் சேர்க்காமலும் ஷம்லா ஏமாற்றத் தொடங்கியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த வாலிபர் தனது பணத்தைத் திரும்பக் கேட்டபோது, தராமல் காலம் கடத்தியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாலிபர், பெரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அனில்குமார் தலைமையிலான போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஷம்லா திட்டமிட்டுத் திருமண ஆசை காட்டி பண மோசடி செய்தது உறுதியானதை அடுத்து, அவரைப் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஷம்லாவிடம் போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், அவர் கேரளா முழுவதும் பல்வேறு இடங்களில் இதே பாணியில் பல வாலிபர்களை ஏமாற்றியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வாலிபர்களைத் தொடர்புகொண்டு, நைசாகப் பேசித் திருமண ஆசை காட்டிப் பணம் பறிப்பதையே இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

கோதமங்கலத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரிடம் ரூ.20 லட்சமும், ஆலுவாவைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.11 லட்சமும் இதேபோலத் திருமண ஆசை காட்டி ஏமாற்றியுள்ளார். இதுதவிர மலப்புறம், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்து, அந்தப் பணத்தில் சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

சம்லா மீது எர்ணாகுளம் மாவட்ட போலீசார் தற்போது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் பாதிக்கப்பட்ட ஏனைய வாலிபர்கள் குறித்தும் மேலதிக விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.