பவானி ஆற்றில் மிதந்து வந்த சாக்கு மூட்டைகள்... இளம்பெண், சிறுமி தலை துண்டித்துக் கொலை!

 

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் மிதந்து வந்த சாக்கு மூட்டைகளில் இளம் பெண் மற்றும் 5 வயது சிறுமி ஆகியோரது துண்டிக்கப்பட்ட தலைகள் மற்றும் உடல் அழுகிய நிலையில் மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பவானி ஆற்றில் சீரக்கடவு படித்துரை பகுதியில் நேற்று முன்தினம் மாலை 3 சாக்கு மூட்டைகள் மிதந்து வந்துள்ளன. அப்பகுதிகளில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சந்தேகத்தின் பேரில் அந்தச் சாக்கு மூட்டைகளைக் கரை சேர்த்துப் பிரித்துப் பார்த்தபோது இந்தத் திடுக்கிடும் தகவல் தெரிய வந்துள்ளது.

சுமார் 30 வயதுடைய இளம்பெண் மற்றும் 5 வயதுடைய சிறுமியின் தலைகள் மற்றும் மற்ற இரண்டு சாக்கு மூட்டைகளில் உடல்பகுதிகள் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஊர் மக்கள் உதவியுடன் இது குறித்து புதூர் காவல்துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விரைந்து வந்த காவல்துறையினர் சாக்கு மூட்டைகளைக் கைப்பற்றி தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்ட நிலையில், தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு 4 நாட்கள் இருக்கும் என்பதால் உடல்கள் திருச்சூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.

மர்ம நபர்கள் யாரோ இளம்பெண்ணையும் சிறுமியையும் கொன்று தலையைத் துண்டித்து சாக்கு மூட்டைகளில் கட்டி பவானி ஆற்றில் வீசிச் சென்றிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச் சாக்குமூட்டைகள் கோவையிலிருந்து மளிகைப் பொருட்கள் பார்சல் வாங்கியதில் அட்டப்பாடி கோட்டத்தரா கடைக்குக் கொண்டு வரப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. கொலையானவர்கள் வடமாநிலத் தொழிலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல உள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.