கோவில் திருவிழா பேனரில் அம்மன் வேடத்தில் திரிஷா: சர்ச்சையை அடுத்து 2 பேர் மீது வழக்குப்பதிவு!
சேலம் மாவட்டம் ஆத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழா விமர்சையாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு ஆத்தூர் பயணியர் மாளிகை அருகே வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பேனர் ஒன்று பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்தப் பேனரில் முதல்-அமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய படமும், அதற்குப் பின்னால் ராவணன் உருவமும் அச்சிடப்பட்டிருந்தது. அதன் கீழ் பிரபல நடிகை திரிஷா அம்மன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது இணையவாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பக்தர்களின் புனிதமான கோவில் திருவிழாவில் சினிமா நடிகையை அம்மன் வேடத்தில் சித்தரித்து பேனர் வைப்பதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இணையதளங்களில் இந்த பேனரின் படங்கள் பரவிப் பெரும் விவாதப் பொருளாக மாறியதை அடுத்துச் சலசலப்பு தீவிரமடைந்தது. எதிர்ப்புகள் வலுத்ததால் இரவோடு இரவாக நடிகை திரிஷாவின் புகைப்படம் மறைக்கப்பட்டு, வேறொரு பெண்ணின் படம் ஒட்டப்பட்டது. இருப்பினும் நீதிமன்றக் கட்டுப்பாடுகளை மீறி வைக்கப்படும் இதுபோன்ற பேனர்கள் குறித்து மக்கள் கடும் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து அனுமதியின்றிப் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த அந்த பேனர்களைக் காவல் துறையினர் நேரில் சென்று அகற்றினர். இது தொடர்பாக ஆத்தூர் நகரக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் அடிப்படையில் கடைவீதியைச் சேர்ந்த சந்துரு மற்றும் தலைவாசலைச் சேர்ந்த கோகுல் ஆகிய 2 பேர் மீது வழக்கு பாயந்துள்ளது. ஆன்மீக விழாவில் நடிகையின் படத்தை வைத்து விளம்பரம் தேட முயன்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.