நடிகை சௌகார் ஜானகி உடல் இன்று காலை 10 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி, மாலை இறுதி ஊர்வலம்!
மறைந்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் உடல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக தேனாம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது. தமிழ் மற்றும் பிற மொழித் திரைப்படங்களில் நீண்ட காலம் நடித்து புகழ்பெற்ற இவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளதாக அவரது உறவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இறுதி ஊர்வலத்திற்குப் பின் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூத்த நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது இல்லத்திற்குச் சென்று திரைப்பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.