பள்ளிகளில்  செல்வமகள் சேமிப்புத் திட்ட முகாம்களை நடத்தத் தபால்துறை புதிய அதிரடித் திட்டம்!

 

பெண் குழந்தைகளின் எதிர்காலப் பாதுகாப்பிற்காக மத்திய அரசால் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ம் தேதி தொடங்கப்பட்ட சிறுசேமிப்புத் திட்டம் 'சுகன்யா சம்ரித்தி யோஜனா' ஆகும். தமிழகத்தில் செல்வமகள் சேமிப்புத் திட்டம் என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 250 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை பெற்றோரால் முதலீடு செய்ய முடியும்.

இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 3,92,64,747 கணக்குகள் தொடங்கப்பட்டு 2,59,577 கோடியே 20 லட்சம் ரூபாய் வரை பெருமளவாகச் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் மொத்தம் 38,90,666 கணக்குகள் தொடங்கப்பட்டு 31,211 கோடியே 29 லட்சம் ரூபாய் வரை சேமிப்புப் பணம் திரட்டப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 11.3 லட்சம் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு அகில இந்திய அளவில் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இச்சேமிப்பில் முன்னணியில் உள்ளன.

இத்திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று அதிக மாணவிகளைச் சேர்க்கும் நோக்கில், அனைத்துப் பள்ளிகளிலும் தபால்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இக்கணக்கைத் தொடங்கப் பெண் குழந்தை 10 வயதுக்குக் குறைவான இந்தியக் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும் என்பது விதியாகும். புதிய கல்வி ஆண்டு தற்பொழுதுதான் தொடங்கியுள்ளதால், வரும் மாதங்களில் பள்ளிகளிலேயே நேரடி முகாம்களை நடத்திச் சிறுமிகளை இதில் இணைக்க உள்ளதாகத் தபால்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.