காங்கிரஸ் மூத்த தலைவர் திடீர் மறைவு.. கே.எஸ்.அழகிரி இரங்கல்..!

 
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான வேல்துரை மறைவிற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சி மூத்த உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவுமான வேல்துரை கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.
இந்தநிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினராக சேரன்மாதேவி தொகுதியில் இருந்து இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டு மிகச்சிறப்பாக பணியாற்றிய திரு பி.வேல்துரை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக இளமைப்பருவம் முதல் அயராது பாடுபட்டவர்.

 மக்களின் பிரச்சனைகளை அறிந்து அதற்காக குரல் கொடுத்து போராடக்கூடியவர். பழகுவதற்கு இனிய பண்பாளர், மனிதநேயர்.தமிழக காங்கிரஸின் முன்னோடிகளில் ஒருவரான திரு பி.வேல்துரை அவர்களது மறைவு காங்கிரஸ் பேரியக்கத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் திரு ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் திரு எஸ்.ராஜேஷ்குமார், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் திரு கே.பி.கே. ஜெயக்குமார் தனசிங் மற்றும் திரு கே. சங்கர பாண்டியன் ஆகியோர் மறைந்த திரு பி.வேல்துரை அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என குறிப்பிட்டிருந்தார்.