மாணவிக்கு பாலியல் தொல்லை.. ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் அதிரடி கைது !!

 

சென்னை நந்தனத்தில் ஒய்எம்சிஏ உடற்கல்வியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு, முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. இந்த கல்லூரியில் தமிழக முழுவதும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இது தொடர்பாக அந்த மாணவி கல்லூரி முதல்வர் மீது சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கல்லூரி முதல்வர் ஆபிரகாமுக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர் ஒரு மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இதனிடையே, இதே விவகாரத்தில் கல்லூரி நிர்வாகம் நடத்திய விசாரணையில், முதல்வர் ஆபிரகாம் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும்  உடற்பயிற்சி கூடத்தில் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அந்த கல்லூரியின் முதல்வர் அத்துமீறியது தெரியவந்தது. இதனால் கல்லூரி நிர்வாகம் சார்பில் கடந்த 9ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் பேரில் கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிகாரம் நேற்று கைது செய்யப்பட்டார். போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். மாணவிக்கு பாலியல் தொல்லை விவகாரத்தில் கல்லூரி முதல்வர் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.