திருநெல்வேலியில் அதிர்ச்சி... பள்ளி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது!

 

திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் காவல் எல்லைக்குட்பட்ட அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தென்காசியைச் சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

வன்னிகோனந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாகத் தேவர்குளம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ரோந்து சென்ற போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த தென்காசி மாவட்டம் புளியங்குடி இந்திரா நகரைச் சேர்ந்த சரவணதாஸ் (19) என்பவரைப் பிடித்துச் சோதனை செய்தனர். சோதனையில் அவர் விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த 260 கிராம் கஞ்சாவைக் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தேவர்குளம் போலீசார், சரவணதாஸைக் கைது செய்து அவரை நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.