undefined

அதிர்ச்சி... பொதுத்தேர்வு மையக் கழிப்பறையில் 10ம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை பிறப்பு!

 

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி வாரியம் (MPBSE) நடத்தி வரும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வின் போது, தேர்வு மைய கழிவறையில் மாணவி ஒருவருக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிதாம்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணிதத் தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது தேர்வு எழுதிக் கொண்டிருந்த 10-ஆம் வகுப்பு மாணவிக்குத் திடீரென கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தேர்வு மேற்பார்வையாளரிடம் அனுமதி பெற்று கழிப்பறைக்குச் சென்ற மாணவி, நீண்ட நேரமாகியும் வராததால் ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது உள்ளே குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. கதவைத் திறந்து பார்த்தபோது, அங்கு அந்த மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது தெரியவந்தது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மாணவியும் குழந்தையும் பிதாம்பூர் சமூக சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பிதாம்பூர் போலீசார் முதற்கட்டமாக 'பூஜ்ஜிய எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்தனர். மாணவி இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், மேல் விசாரணைக்காக இந்த வழக்கு பெட்மா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு இளைஞருடன் பழகி வந்ததாகத் தெரியவந்துள்ளது. அந்த இளைஞரை அடையாளம் கண்டுள்ள போலீசார், அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மைனர் சிறுமி ஒருவருக்குத் தேர்வு மையத்திலேயே குழந்தை பிறந்த விவகாரம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.