அதிர்ச்சி... இலங்கை கடல்பகுதியில் ரூ.161 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்!
இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் மீன்பிடி விசைப்படகு ஒன்றில் கடத்தி வரப்பட்ட சுமார் 161 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குப் பின்னணியாகச் செயல்பட்ட 4 இலங்கையர்கள் இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினர் இணைந்து நேற்று முன்தினம் மாலை தெற்கு கடல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்து கொண்டிருந்த ஒரு மீன்பிடி விசைப்படகை வழிமறித்துத் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்தப் படகில் ரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 161 கிலோ எடையுள்ள போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டெடுத்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 161 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சர்வதேச போதைப்பொருள் சந்தையில் ஒரு பெரிய அடி எனக் கருதப்படுகிறது.
தொடர்ந்து படகில் இருந்த இலங்கையைச் சேர்ந்த 4 பேரைக் கைது செய்த பாதுகாப்பு படையினர், அவர்களைத் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தப் போதைப்பொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன? இதன் பின்னணியில் உள்ள சர்வதேச கடத்தல் புள்ளிகள் யார்? என்பது குறித்து இலங்கை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மற்றும் இந்தியக் கடல் எல்லைகளிலும் இதன் எதிரொலியாகக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.