அதிர்ச்சி வீடியோ... ராகிங் புகாரளித்த மாணவியை கல்லூரி வளாகத்திலேயே செருப்பால் அடித்த சீனியர் மாணவன்.. கண்டுக்கொள்ளாத போலீசார்!
திருச்சி மாவட்டம் துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில், ராகிங் கொடுமை குறித்துப் புகார் அளித்த முதலாம் ஆண்டு மாணவி மற்றும் அவரது சகோதரர் மீது சீனியர் மாணவர் நடத்திய தாக்குதல் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
துவாக்குடி அரசு கலைக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியை அதே கல்லூரியின் இரண்டாம் ஆண்டு வரலாற்றுத் துறை மாணவர் கிருபாகரன், ராகிங் குறித்து புகாரளித்ததால் கல்லூரி கேண்டீனில் வைத்து செருப்பால் அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மாணவிக்குக் கிருபாகரன் ராகிங் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அந்த மாணவி கல்லூரி ஆசிரியரிடமும், துவாக்குடி காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட ஆத்திரத்தில், கிருபாகரன் தனது நண்பர்களுடன் கல்லூரிக்கு வந்துள்ளார். அங்கு மாணவி மற்றும் அவருக்குத் துணையாக வந்த அவரது சகோதரரையும் தகாத வார்த்தைகளால் திட்டிய கிருபாகரன், தான் மறைத்து வைத்திருந்த செருப்பால் மாணவியைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் தலையில் பலத்த அடிபட்ட நிலையில், மாணவி அங்கேயே மயங்கி விழுந்தார். உடனடியாக சக மாணவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவி ஒரு வாரத்திற்கு முன்பே துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதே, கிருபாகரன் துணிச்சலாகக் கல்லூரிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் காரணம் என மாணவியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் மற்றும் துவாக்குடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள மாணவர் கிருபாகரன் மற்றும் அவரது நண்பர்களைப் போலீசார் தேடி வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் ராகிங் தடுப்புச் சட்டம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பது குறித்தும் கல்வித் துறை ஆய்வு செய்து வருகிறது.