சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை...  சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு! 

 

மத்திய கிழக்கில் அமைந்துள்ள சிரியா நாட்டின் முன்னாள் அதிபராகப் பஷீர் அல் அசாத் செயல்பட்டு வந்த நிலையில் கிளர்ச்சி மற்றும் உள்நாட்டுப் போரால் அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து அவர் ரஷியாவுக்குத் தப்பிச் சென்ற நிலையில், அவரது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மனித குலத்திற்கு எதிரான செயல்கள் மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் சிரியா முன்னாள் அதிபர் பஷீர் அல் அசாத்திற்கும் அவரது சகோதரருக்கும் டமாஸ்கஸ் கோர்ட்டு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மனித குலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக  உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த  தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுப் புதிய அதிபராக அகமது அல் ஷெரா பொறுப்பேற்றுள்ள சூழலில் இந்த நீதிமன்றத் தீர்ப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அதிபர் பஷீர் அல் அசாத் ரஷியாவில் வசித்து வருவதால் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உடனடியாக நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாகினும்  தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு பாதிக்கப்பட்ட மக்களிடையே ஒரு பெரிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படப் போகிறது என்பதை அனைவரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.