16 தனியார் மழலையர் பள்ளிகளை மூட கலெக்டர் உத்தரவு - சிவகங்கையில் பரபரப்பு.. விதிகளை மீறி செயல்பட்டது அம்பலம்!
சிவகங்கை மாவட்டத்தில் அரசின் உரிய அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த 16 தனியார் மழலையர் பள்ளிகளை உடனடியாக மூடுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் குறித்து கல்வித் துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், அரசின் எவ்வித அனுமதியும் பெறாமல் விதிகளை மீறி 16 தனியார் மழலையர் பள்ளிகள் இயங்கி வந்தது தெரியவந்தது.
மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, கண்டறியப்பட்ட அந்த 16 மழலையர் பள்ளிகளையும் உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறிப் பள்ளிகளைத் தொடர்ந்து இயக்க முயன்றால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் முன், அப்பள்ளி அரசால் அங்கீகரிக்கப்பட்டதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.