சிவகங்கை இரட்டை கொலை வழக்கு: குடும்பத்தினருக்கு அரசுப் பணி - உறவினர்களின் 4 நாட்கள் போராட்டத்தில் உடன்பாடு!

 

சிவகங்கையில் நடைபெற்ற இரட்டைக் கொலையைக் கண்டித்து உடல்களை வாங்க மறுத்து நான்கு நாட்களாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த உறவினர்களுடன் நடத்தப்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்குச் சுகாதாரத்துறையில் தற்காலிகப் பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

சிவகங்கையில் நிகழ்ந்த இரட்டைக் கொலையைக் கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் உடல்களைப் பெற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து நான்கு நாட்களாகத் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அதிகாரிகளுக்கும் உறவினர்களுக்கும் இடையே நடத்தப்பட்ட சுமூகமான அமைதிப் பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டது.

பேச்சுவார்த்தையின் முடிவில், உயிரிழந்த பூப்பாண்டியின் சகோதரி பூமணி மற்றும் தெய்வேந்திரனின் தம்பி ராதாகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் சுகாதாரத்துறையின் கீழ் தற்காலிக 'டெங்கு மஸ்தூர்' பணிக்கான அதிகாரப்பூர்வ பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

குடும்பத்தினருக்குப் பணி ஆணைகள் வழங்கப்பட்டதை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டு உறவினர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களைப் பெற்றுக்கொள்ள உடன்பாடு தெரிவித்தனர்.