துபாயில் சிக்கித் தவிப்போருக்கு நிபந்தனையற்ற உதவி - நடிகர் சோனு சூட் அறிவிப்பு!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக துபாயில் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு, தங்குவதற்குப் பாதுகாப்பான இடவசதி செய்து தருவதாகப் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.
அணுசக்திப் போட்டி மற்றும் பிராந்திய மோதல்கள் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த சனிக்கிழமை முதல் வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடியாக ஈரானும் அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருவதால், மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெரும் போர்ப்பதற்றம் நிலவுகிறது.
பாதுகாப்பு கருதிப் பல நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுலா மற்றும் வேலை நிமித்தமாகச் சென்ற ஆயிரக்கணக்கான பயணிகள், விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு உதவிய நடிகர் சோனு சூட், தற்போது துபாய் பயணிகளுக்காக மீண்டும் முன்வந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ மற்றும் 'X' தளப் பதிவில் கூறியிருப்பதாவது: "போர்ச் சூழல் காரணமாகப் பல பயணிகள் துபாயில் தங்குவதற்கு இடமின்றித் தவித்து வருகின்றனர். நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ துபாயில் இக்கட்டான நிலையில் இருந்தால், நாங்கள் பாதுகாப்பான தங்குமிடத்தை முற்றிலும் இலவசமாக வழங்குகிறோம்."
"உதவி செய்வதில் தேச பேதம் கிடையாது, எந்த நிபந்தனைகளும் இல்லை; மனிதாபிமானம் ஒன்றே பிரதானம்" என்று குறிப்பிட்டுள்ள அவர், உதவி தேவைப்படுபவர்கள் இன்ஸ்டாகிராமில் @dugastaproperties என்ற முகவரிக்கு நேரடிச் செய்தி அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், இந்தத் தகவல் தேவைப்படும் உரிய நபர்களைச் சென்றடைய அனைவரும் இதைப் பகிருமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தவிப்பவர்களுக்கு உதவும் நோக்கில் சோனு சூட் எடுத்துள்ள இந்த முயற்சிக்குச் சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.