+2வில் தேர்ச்சிப் பெற்றும், கல்லூரியில் இடம் கிடைக்காததால் மாணவி தற்கொலை முயற்சி!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், அரசு கலைக் கல்லூரியில் இடம் கிடைக்காத விரக்தியில் பிளஸ்-2 மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி பூஜா. இவர் அண்மையில் வெளியான பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து மேல் படிப்பிற்காக அங்குள்ள அரசு கலைக் கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார். ஆனால், பூஜா எடுத்திருந்த மதிப்பெண்கள் குறைவாக இருந்த காரணத்தால், கல்லூரியின் முதற்கட்ட சேர்க்கையில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே பூஜா மிகுந்த மன உளைச்சலிலும், விரக்தியிலும் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடுமையான மன உளைச்சலில் இருந்த பூஜா, தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது பூஜாவின் தங்கை பிரியா எதிர்பாராத விதமாக அறைக்குள் வந்துள்ளார். அக்கா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தமாக அலறியுள்ளார். பிரியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாகப் பூஜாவைத் தூக்கில் இருந்து மீட்டு, அவசர அவசரமாக ஓசூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி பூஜாவிற்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாகவும், தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்வு முடிவுகள் அல்லது கல்லூரி சேர்க்கை போன்ற காரணங்களால் மன அழுத்தம் ஏற்பட்டால், தற்கொலை எண்ணங்களை விடுத்து, தமிழக அரசின் 'சினேகா' தற்கொலை தடுப்பு உதவி எண்களை (104 அல்லது 044-24640050) தொடர்பு கொண்டு இலவசமாகத் தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். உயிரை மாய்ப்பது எதற்கும் தீர்வல்ல.