அடுத்தடுத்து திருப்பம்... இன்று நடைபெறவிருந்த விசிக உயர்மட்டக் குழு கூட்டம் திடீர் ரத்து... தவெகவுக்கு ஆதரவு தருவதில் நீடிக்கும் மௌனம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைத் திரட்ட தமிழக வெற்றிக் கழகம் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அக்கட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை நடத்தவிருந்த ஆலோசனைக் கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தவெக-வுக்கு தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ள சூழலில், விசிக-வின் இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரும் மே 8-ம் தேதி தனது ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளதால், அன்றைய தினமே விசிக-வும் தனது இறுதி முடிவை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
திமுக கூட்டணியில் நீடிப்பதா அல்லது தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து விசிக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமான முடிவை எடுக்காமல் மௌனம் காத்து வருகிறது. திருமாவளவன் தலைமையிலான விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு இருந்தால் மட்டுமே தவெக-வால் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியும் என்பதால், அவர்களின் அடுத்தகட்ட நகர்வு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே திமுக மற்றும் அதிமுக இடையே ஆட்சியமைக்க ரகசிய உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல்கள், விசிக போன்ற கூட்டணி கட்சிகளை ஆழமாக யோசிக்க வைத்துள்ளன. தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றம் நிகழப்போகும் இந்த இக்கட்டான தருணத்தில், சிறிய கட்சிகளின் ஒவ்வொரு முடிவும் ஆட்சிக் கட்டிலில் யார் அமர்வார்கள் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.
மே 8-ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாகத் தெரியும். அதுவரை தமிழக அரசியலில் நிலவி வரும் இந்தக் குழப்பமான மற்றும் விறுவிறுப்பான சூழல் நீடிக்கும் என்பதால், தொண்டர்களும் பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.