5 வது மாடியிலிருந்து குதித்து மனநல மருத்துவர் தற்கொலை... பெரும் சோகம்!
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த மனநல மருத்துவர் ஹேமிகா (வயது 40) என்பவர் அங்குள்ள ராஜ்நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்டுத் தனியே வசித்து வந்துள்ளார். விவாகரத்துக்குப் பிறகு ஹேமிகா கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் இருந்த ஹேமிகா நேற்று இரவு 7வது மாடியில் உள்ள தனது வீட்டில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமிகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
7வது மாடியில் இருந்து கீழே குதித்து மனநல மருத்துவர் தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான உண்மையான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சக மனிதர்களின் மன உளைச்சலைப் போக்கும் மருத்துவரே தற்கொலை செய்துகொண்ட சோகச் சம்பவம் பலரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.