கோடை விடுமுறை, சுபமுகூர்த்தம்... தமிழகம் முழுவதும் நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

 

நாளை மே 14-ம் தேதி முதல் வரக்கூடிய வார விடுமுறை மற்றும் சுபமுகூர்த்த நாட்களை முன்னிட்டு, பொதுமக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிட்டுள்ளது. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் நெரிசலின்றிப் பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு மே 14-ம் தேதி 80 பேருந்துகளும், மே 15-ம் தேதி 620 பேருந்துகளும், மே 16-ம் தேதி 655 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதுதவிர, கோயம்பேடு மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களிலிருந்து திருவண்ணாமலை, வேளாங்கண்ணி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்குத் தனித்தனியே சிறப்புப் பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் பல்வேறு வழித்தடங்களில் ஆயிரக்கணக்கான கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதால், பயணிகள் பயணத்தைத் திட்டமிட்டு மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஏற்கனவே ஆயிரக்கணக்கான பயணிகள் இணையதளம் மற்றும் செயலி மூலம் முன்பதிவு செய்துள்ள நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தொலைதூரப் பயணம் மேற்கொள்வோர் தங்களது பயணச்சீட்டுகளை முன்கூட்டியே www.tnstc.in என்ற இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களில் பயணிகளின் வசதிக்காகச் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.