13 பேனாக்கள், 5 ஸ்பூன்... இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து அறுவை சிகிச்சையின்றி வெளியேற்றம்!  

 

 

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவ்பேட் நகரைச் சேர்ந்த 33 வயது இளம்பெண் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு கடுமையான வயிற்று வலியால் வேதனையடைந்துள்ளார். இதனால் அவரை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்று மருத்துவர்களிடம் பரிசோதனை செய்துள்ளனர்.

அப்போது டாக்டர்கள் நடத்திய பரிசோதனையில் அந்தப் பெண்ணின் வயிற்றில் பேனாக்கள் மற்றும் ஸ்பூன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் மற்றும் பெண்ணின் பெற்றோர் உடனடியாகத் தகுந்த சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

டாக்டர் ராமச்சந்திர ரெட்டி தலைமையிலான குழுவினர் அறுவை சிகிச்சையின்றி எண்டோஸ்கோப்பிக் மூலம் வயிற்றில் இருந்த 13 பேனாக்கள், 5 ஸ்பூன்கள் மற்றும் ஒரு மெழுகுவர்த்தியை வெற்றிகரமாக அகற்றினர். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இந்தப் பெண் சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் 4 பேனாக்களை விழுங்கியிருந்ததும், அவற்றை மருத்துவர்கள் அகற்றியிருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.