“கே.என்.நேருவை முந்தைய திமுக அரசு பாதுகாத்தது”- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு குற்றச்சாட்டு!
நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமன முறைகேட்டில் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிராக அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியும், முந்தைய திமுக அரசு அவரைப் பாதுகாத்ததாகத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியுள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களில் சுமார் ரூ.634 கோடி அளவிற்கு லஞ்சம் பெறப்பட்டதாகக் கே.என்.நேரு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக மேலதிக நடவடிக்கை மற்றும் வழக்குப் பதிவு செய்யக் கோரி அமலாக்கத் துறை சார்பில் தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டது.
அமலாக்கத் துறையின் அந்தக் கடிதத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், முந்தைய திமுக அரசு கே.என்.நேருவைப் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டதாகத் தற்போது உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.
அமலாக்கத் துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.