ரேஷன் கடைகளில் கிலோ ரூ.15-க்கு கோதுமை மாவு - தமிழக அரசு முடிவு!

 

வெளிச்சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்குக் குறைந்த விலையில் தரமான கோதுமை மாவை வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களின் நலனைக் காக்கும் வகையில், ரேஷன் கடைகள் மூலம் ஒரு கிலோ கோதுமை மாவு வெறும் ரூ. 15-க்கு வழங்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வெளிச்சந்தையில் கோதுமை மாவு சராசரியாக கிலோ ரூ. 60 வரை விற்கப்பட்டு வரும் சூழலில், ஏழை எளிய மக்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தாக்கல் செய்யபட்ட தமிழக பட்ஜெட்டில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பாக்கெட்டுகளில் கோதுமை வழங்கும் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து தற்போது இந்த முடிவு வந்துள்ளது.

மத்திய அரசிடம் இருந்து கோதுமை பெறப்பட்டு, அதனை நவீன ஆலைகளில் மாவாக அரைத்துப் பாக்கெட்டுகளில் அடைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் பிற மாநிலங்களில் விற்கப்படும் விலையைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.