ஆந்திர எல்லைப் பகுதியில் மீன்பிடிக்க அனுமதி - ஆந்திர அரசிடம் தமிழக அரசு கோரிக்கை!
சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில மீனவர்களிடையே நிலவி வரும் எல்லைக் கடல் பகுதி மீன்பிடிப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தமிழ்நாடு அரசு புதிய ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாகத் தமிழ்நாடு மீனவர் நலத்துறை அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
மீனவர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னை மீன்பிடித் துறைமுகத்தைத் தங்குதளமாகக் கொண்டு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகச் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் தங்களது மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இப்பகுதி மீனவர்கள் பாரம்பரியமாக ஆந்திர எல்லைக்கு உட்பட்ட சில கடல் பகுதிகளுக்கும் சென்று மீன்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
சமீபகாலமாக எல்லையோரக் கடல் பகுதிகளில் இரு மாநில மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பதில் பல்வேறு மோதல்களும் அசாதாரணச் சூழல்களும் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இரு மாநில மீனவர்களின் வாழ்வாதாரமும், கடலில் பாதுகாப்பு நிலவரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீனவர்கள் எவ்வித அச்சமுமின்றிச் சுமுகமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆந்திர எல்லைக்கு உட்பட்ட பாரம்பரியப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் எவ்வித இடையூறுமின்றி மீன்பிடிக்க அனுமதிக்குமாறு ஆந்திரப் பிரதேச அரசுக்குத் தமிழ்நாடு அரசு தற்பொழுது முறைப்படி கோரிக்கை விடுத்துள்ளது. இரு மாநில அதிகாரிகளும் இணைந்து பேசி இப்பிரச்சினைக்குத் விரைவில் ஒரு சுமூகமான தீர்வு காண்பார்கள் எனத் தொழில்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.