தடைக்காலம் முடிந்தது... நள்ளிரவு கடலுக்குள் சீறிப் பாய்ந்த 15,000 விசைப்படகுகள்... மீனவர்களுக்குத் திருவிழா!

 

நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில், 15,000 விசைப்படகுகள் கடலுக்குள் சீறிப் பாயத் தொடங்கின. தமிழகம் , ஆந்திரா உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான ஆழ்கடல் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் புதிய வசந்த காலம் நேற்று நள்ளிரவு துவங்கியது.

கடலில் வாழும் மீன்களின் இனப்பெருக்கத்தை எவ்வித இடையூறும் இன்றி இயற்கையாகப் பெருக்கும் உன்னத நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 15-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி வரையிலான மொத்தம் 61 நாட்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருவது வழக்கம். இதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக நீடித்து வந்த இந்த நீண்ட 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமானது நேற்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில், கடந்த 2 மாதங்களாகக் கடலுக்குள் செல்லாமல் கரைகளிலேயே முடங்கிக் கிடந்த மீனவர்கள், உற்சாகத்துடன் புறப்பட்டனர். 

தமிழகத்தின் சென்னை காசிமேடு, கடலூர், நாகப்பட்டினம், ராமேசுவரம், தூத்துக்குடி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட ஒட்டுமொத்த வங்கக்கடல் ஒட்டிய கடலோர மாவட்டங்களில் இருந்து சற்றேறக்குறைய 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 1 லட்சத்திற்கும் அதிகமான மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்கப் உற்சாகத்துடன் புறப்பட்டனர். 

கடந்த 61 நாட்களாகக் கடல் மீன்கள் வரத்து இன்றி வெறிச்சோடிப் போயிருந்த காய்கறிச் சந்தைகள் மற்றும் மீன் மார்க்கெட்டுகளில், நாளை முதல் வஞ்சிரம், பாக்லை, சுறா, நண்டு மற்றும் இறால் போன்ற ருசியான ஆழ்கடல் மீன்கள் தாராளமாகக் குவியத் தொடங்கும் என்பதால், அசைவப் பிரியர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.