மகளிர் உரிமைத்தொகை - தகுதியற்றவர்களைக் கண்டறிந்து நீக்க அரசு தீவிர நடவடிக்கை!
மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பரவலாக எழுந்து வரும் சூழலில், அரசின் விதிமுறைகளை மீறித் தவறான தகவல்கள் மூலம் உதவித்தொகை பெற்று வருவோரைக் கண்டறிந்து பயனாளிகள் பட்டியலிலிருந்து நீக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசுத் தீவிரப்படுத்தியுள்ளது.
அரசுப் பணியாளர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகள் கண்டறியப்பட்டு நீக்கப்படுகின்றனர். ஊராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி மற்றும் நகராட்சி மக்கள் பிரதிநிதிகளின் குடும்பத்தினர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அவர்கள் நீக்கப்பட்டு வருகின்றனர்.
நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் மற்றும் வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் ஆய்வு செய்யப்பட்டுப் பட்டியலிலிருந்து விலக்கப்படுகின்றனர்.
தகுதியற்ற நபர்கள் நிதி உதவி பெறுவதைத் தடுப்பதன் மூலம், விதிகளின்படி உண்மையாகவே நிதியுதவி தேவைப்படும் ஏழை மற்றும் எளிய பெண்களுக்கு மட்டுமே அரசின் திட்டம் சென்றடைவதை உறுதி செய்ய இத்தணிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.