தமிழக அரசுக்கு ரூ. 1,000 கோடி இழப்பு... மணல் கடத்தலில் 'மயிலாடுதுறை' நபர்? லாரி உரிமையாளர்கள் புகார்!

 

தமிழகத்தில் சட்டவிரோதமாக மணல் மற்றும் கிராவல் மண் எடுக்கப்படுவதால் அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் சட்டவிரோதக் கனிமக் கடத்தலால் அரசுக்குச் சுமார் ரூ. 1,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் செல்ல. ராசாமணி தெரிவித்தார். இந்த முறைகேடுகளுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தனிநபர் தலைமை தாங்குவதாகவும், அவர் பல பினாமிகள் பெயரில் மாநிலம் முழுவதும் கிராவல் மண் எடுக்கும் உரிமைகளைப் பெற்றுள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற்ற நிலங்களைத் தாண்டி, அனுமதி இல்லாத பட்டா நிலங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் மண் அள்ளப்படுகிறது. 40 மீட்டர் ஆழம் வரை மட்டுமே அனுமதி உள்ள நிலையில், அதைத் தாண்டிப் பல மடங்கு ஆழத்தில் சட்டவிரோதமாக மண் வெட்டி எடுக்கப்படுகிறது.

கனிமவளத் துறையின் போலியான அனுமதி சீட்டுகளைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான லாரிகளில் மண் கடத்தப்படுகிறது. இதனால், இதில் தொடர்பில்லாத உண்மையான லாரி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சிக்கிப் போலீசார் மூலம் கைது செய்யப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார்.

மயிலாடுதுறை, திருச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தச் சட்டவிரோதச் செயல்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்துப் பலமுறை கனிமவளத் துறை அதிகாரிகளுக்குப் புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும், மாறாக முறைகேடுகளுக்குத் துணை போவதாகவும் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது.

எனவே, இந்த மாபெரும் ஊழலில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் செல்ல. ராசாமணி நாமக்கல்லில் வலியுறுத்தியுள்ளார்.