இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பு... அமெரிக்காவில் புதிய கிரீன் கார்டு படிவம் அறிமுகம் - செப்டம்பர் 18 முதல் பழைய படிவங்கள் நிராகரிக்கப்படும்!

 

அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமைகோரல் மற்றும் தகுதியைச் சரிசெய்வதற்கான கிரீன் கார்டு விண்ணப்பப் படிவத்தில் (I-485) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு அறிவித்துள்ளது.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் USCIS, செப்டம்பர் 18 முதல் அமலுக்கு வரவுள்ள புதிய "பொதுச் சுமை" விதிகளுக்கு ஏற்ப இந்த மாற்றங்களைச் செய்துள்ளது. மெடிகெய்ட், உணவு முத்திரைகள் போன்ற அரசாங்க நிதி உதவிகளைப் பெறுபவர்களின் குடியேற்ற விண்ணப்பங்களை நிராகரிக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகத்தால் இந்த விதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

ஜனவரி 20, 2025 பதிப்பிலான பழைய I-485 படிவங்கள் மூலம் செய்யப்படும் விண்ணப்பங்கள், செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு மேல் தபால் முத்திரையிடப்பட்டாலோ அல்லது இணையவழியில் சமர்ப்பிக்கப்பட்டாலோ முற்றிலும் நிராகரிக்கப்படும். புதிய படிவத்தை ஏற்றுக்கொள்வதில் எந்தவிதச் சலுகைக் காலமும் வழங்கப்படாது என்பதால், இதன் முன்னோட்டப் பதிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

பழைய படிவங்கள் செப்டம்பர் 18-க்கு முன்னர் அனுப்பப்பட்டிருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதேவேளையில், புதிய படிவத்தை செப்டம்பர் 18-ஆம் தேதிக்கு முன்னர் அவசரப்பட்டுத் தாக்கல் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.