இரவோடு இரவாக கொட்டி தீர்த்த கனமழை.. சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்தால் பரபரப்பு..!!

 

ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மாநகர பேருந்து சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவகின்றது. இதனால் பல்வேறு சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் மூலகொத்தளம் ரயில்வே சுரங்கப்பாதையிலும்  முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் இன்று காலை செங்குன்றத்தில் இருந்து திருவொற்றியூரை நோக்கி மாநகர பேருந்து (தடம் எண் 157) புறப்பட்டது.

மூலக்கொத்தளம் ரயில்வே சுரங்க பாதை வழியாக சென்றபோது அங்கு தேங்கி இருந்த மழைநீரில் பேருந்து சிக்கிக்கொண்டது. வெகுநேரமாக பேருந்தை மீட்க முடியாததால் அவதிக்குள்ளான பயணிகள் இறங்கி வேறு பேருந்துகளை பிடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மழைநீரில் சிக்கிய பேருந்தை ரெக்கவரி வாகனம் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி கவுன்சிலர் வேளாங்கண்ணி மாநகர பேருந்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பேருந்து மீட்கப்பட்டது. இதனால் பேருந்து பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.