பிரபல தோனி ரசிகர் தற்கொலை.. சோகத்தில் மூழ்கிய கிராமம்..!

 

பிரபல தோனி ரசிகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன். இவருக்கு அன்பரசி என்ற மனைவியும், கிஷோர் (10), சக்தரன் (8) என்ற மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு பத்து நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. கோபி கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர். சிஎஸ்கே அணியின் நிறத்தில் வீட்டின் நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றி, வீடு முழுவதும் தோனியின் படங்களை வரைந்துள்ளதால்,  வீட்டிற்கு ஏராளமான ரசிகர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று காலை கோபி கிருஷ்ணன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். அப்போது, ​​கோபிக்கும், அதே ஊரைச் சேர்ந்த சிலருக்கும் இடையே பிரச்னை இருப்பது தெரியவந்தது.

மேலும் நேற்று இரவு நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது கோபிக்கும் சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அருகில் இருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இன்று காலை வீட்டில் கோபி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது விரக்தியில் தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.